×

ஆடுகளை கடித்து குதறிய மர்ம விலங்கு

மரக்காணம், மார்ச் 2: மரக்காணம் அருகே மர்ம விலங்கு கடித்து குதறியதில் 4 ஆடுகள் உயிரிழந்தன. மரக்காணம் ஒன்றியத்திற்குட்பட்ட அசப்பூர் கிராமத்தின் அருகில் பல ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது குருபுறம் மூலிகை வன காடு. இதுபோல் இப்பகுதியை ஒட்டியவாறு ஓங்கூர் ஆறும் செல்கிறது. இதனால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் விவசாயத்திற்கு அடுத்தபடியாக ஆடு மாடு உள்ளிட்ட கால்நடைகள் வளர்ப்பு தொழில் செய்து வருகின்றனர். இக்கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் வீதியில் வசிப்பவர் எழிலரசன் (40). இவர் 40க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். வழக்கம்போல் நேற்று முன்தினம் எழிலரசன் ஆடுகளை மேய்த்து விட்டு தனது வீட்டின் அருகில் இருக்கும் ஆட்டுப்பட்டியில் அடைத்துள்ளார்.

பின்னர் அவர் நேற்று காலை ஆட்டுப்பட்டியை பார்த்தபோது 4 ஆடுகள் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். மர்ம விலங்குகள் கடித்து குதறியதில் நான்கு ஆடுகள் இறந்திருப்பது தெரியவந்தது. மேலும் 10 ஆடுகளை காணவில்லை. இதுகுறித்து எழிலரசன் வனத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மர்ம விலங்குகள் கடித்து குதறியதால் உயிரிழந்த ஆடுகளை பார்வையிட்டு ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர். ஆய்வுக்கு பிறகே என்ன விலங்கு கடித்தது என்பது தெரியவரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

The post ஆடுகளை கடித்து குதறிய மர்ம விலங்கு appeared first on Dinakaran.

Tags : Marakanam ,Kurupuram Herb Forest ,Asapur ,Marakanam Union ,Ongur river ,
× RELATED காதலனுடன் பள்ளி மாணவி மாயம் தாய் சடலத்துடன் உறவினர்கள் மறியல்